Monday, October 24, 2016

கனவில் தொடங்கிய கார்காவயல் சித்தர் - பயணம்

அட நான் சந்தர்ப்பவாத நாத்திகன்னு ஊருக்கே தெரியும்
 
படிக்கும் காலத்துல வாத்தியார்கிட்ட உதை வாங்ககூடாதுன்னே போறவழில உள்ள கோயில்ல வேண்டிகினு தைரியாமா போவது வழக்கம். படிச்சிட்டு போனவனுக்கு வேண்டிப்பான் என்னையை போல படிக்காத மண்டும் வேண்டிப்போம். இங்க என்ன ஹை லைட்டுனா என்னைக்கெல்லாம் உதைவாங்ககூடாதுன்னு வேண்டிக்கிறமோ அன்னைக்கு தான் செமத்தியா வாங்குவோம். படிக்காம போனா வாத்தியார்கிட்ட இருந்து கடவுளாலையும் காப்பாத்த முடியாதுன்றது உங்களுக்கே தெரியும் 

உண்மையிலேயே கடவுளுக்கு சக்தியிருந்தா என்னைய வாத்தியார்கிட்ட இருந்து காப்பாத்திருக்கும்ல அன்னைக்கு முடிவுபண்ணினேன் கடவுளை நம்புறது வேஸ்ட் அவருக்கு சக்தியில்லைன்னு. வெறும் கல்ல கும்பிடற கூமுட்டையா இருக்கோம்னு. இப்போ சொல்லுங்க அது சிறுபிள்ளைத்தனம் தான

நாளைடைவில் கடவுள் நம்பிக்கை இருக்கு  இல்லை என்பது விடுத்து அதனை பற்றி சிந்திதிப்பதையே நிறுத்திவிட்டேன். ஆனால் என்றுமே எவர் நம்பிக்கையையும் கேலி செய்வதோ கிண்டல் செய்வதோ இன்றளவும் கிடையாது. ஆனால் கடவுள் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளும் முட்டாள்தனமான சில செயல்களை கழுவி ஊத்துவும் மறந்ததில்லை
இந்த உலகத்தை ஏதோ ஒரு சக்தி ஆட்டுவிக்கிறது அது கடவுளாகவே இருந்துவிட்டு போகட்டுமே. அதிலென்ன பிரச்சனை.
 
சரி சித்தர் விசயத்திற்கு வருவோம் -

சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் வாழ்கிறவர்கள். சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக் கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மை யான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.
அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும்.
 
இதிலிருந்து சற்று மாறி தங்களது வாழ்க்கை நெறிகளை மாற்றி வாழ்பவர்கள் அகோரி சித்தர்கள். அதனை பற்றி பிறகு பார்ப்போம்.

சரி எனது வாழ்க்கையில் சித்தர்கள் தாக்கம் எப்படி?

கனவுகள் வருவது இயல்பு அந்த கனவுகளின் தாக்கமோ அதனை சார்ந்த நிகழ்வுகளோ விடிந்தும் தொடருகிறதென்றால் சற்று யோசிக்க வைத்துவிட்டது. முதல் நாள் இரவு கனவில் சித்தர் உருவில் தெருவில் அங்குமிங்குமாக அலைந்துகொண்டு வாசலை கடக்கும் போதெல்லாம் ஏதோ என்னிடம் சொல்ல முயல்வதும் பிறகு சொல்லாமல் செல்வதுமாக  கனவு முடிந்தது. அது அதோடு முடியவேண்டியது தானே ஆனால் இல்லை

மறுநாள் நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்திக்கின்றேன் அவரின் மொபைலை பார்க்கும் போது அதில் ஒரு பரதேசியை போன்ற நபர் ஒருவரின் புகைபடத்தை முகப்பில் வைத்திருந்ததை கண்டு நக்கலாக கிண்டலடித்தேன்.
அதற்கு நண்பர், உண்மைதான் நீங்கள் கிண்டலடிப்பது போல தான் அவரின் செயல்பாடுகளும் இருக்கும். பரதேசி போன்ற தோற்றமும் பத்தியக்காரத்தனமான உளறலும் தான் அவரின் சிறப்பு என்று மிகச்சாதாரணமாக சொன்னார்.

நானும் நக்கலாக அப்படி என்னதான் சிறப்பு என்று கேட்டேன்.
சில அற்புதங்களை சொல்லி கேட்கும் போது அது மேஜிக் வித்தை போல தான் நாம் பாவிக்க தோன்றும். நேரில் சென்று அதனை உள்வாங்கி உணரும் போது தான் சில சக்திகள் மீது நம்பிக்கை வரும். மேலும் 2 நண்பர்களுடன் நாளை அந்த அகோரி சித்தரை சந்திக்க போகிறேன் விருப்பம் இருந்தால் உடன் வருகிறாயா என்கிறார் நானும் சிறிதும் யோசிக்காமல் பட்டென சொல்லிவிட்டேன்.

காரணம் அங்கு சென்று இவர்களை மீண்டும் கிண்டலடிக்கும் நோக்கில்.
அதன்படி காலை 5 மணிக்கே குளித்து முடித்து 6 மணிக்கு பாபநாசத்திலிருந்து தஞ்சையை நோக்கி புறப்பட்டோம். 7:15க்கெல்லாம் தஞ்சையை அடைந்து அங்கிருந்து பட்டுக்கோட்டை பேருந்தில் ஏறி சரியாக 8:40க்கு பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து சித்தரின் பீடம் அமைந்திருக்கும் #கார்கவாயல் செல்லும் பேருந்தில் ஏறி 10வது நிமிடம் அகோரி சித்தர் இடத்தை அடைந்தோம்.

 சித்தரை காண டோக்கன் முறை கடைபிடிக்கப்பட்டதை கண்டு மனதளவில் சித்தர் மேல் மேலும் கெட்ட அபிப்ராயம் அதிகரிக்க ஆரம்பித்தது. காரணம் நபர் ஒன்றுக்கு 100 ரூபாய் வசூலிப்பதால் இவரும் பணத்திற்காக தான் செயல்படுகிறார் என்று. அடுத்த நிமிடமே அந்த கெட்ட அபிப்ராயம் சுக்குநூறாகி உடைத்தெறியப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புவரை எந்த வித பணமும் வசூலிக்கபடாமல் தான் இருந்ததாம். வரும் பக்தர்கள் மதிய வேளை சாப்பாட்டிற்காக தொலைதூரம் செல்ல வேண்டியிருப்பதால் அவரை காண வரும் அனைவருக்கும் மதிய உணவளிக்க திட்டமிட்டு அதற்காக அந்த 100 ரூபாய் டோக்கன் வடிவில் வசூலிக்க படுகிறதாம். மேலும் அதிலிருந்து ஒரு ரூபாய்கூட சித்தருக்கு செல்வதில்லையாம்.


நண்பர் மற்றும் அவருடன் வந்த இரண்டு நண்பர்களின் டோக்கன் நம்பர் 64, 65, 66 (எனக்கில்லை). சித்தரின் பீடம் நுழையும் போதே ஆண்கள் மட்டும் மேல்சட்டையை கிழட்டு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  முக்கியமான விடயம் குடித்துவிட்டோ அசைவம் சாப்பிட்டுவிட்டோ அவரை பார்க்க செல்லக்கூடாது. அப்படி மீறி வருபவர்களை அவர் சந்திப்பதே இல்லை சில நேரம் காலால் எட்டி உதைத்துவிடுகிறார். சரியாக 10:15க்கு அகோரி சித்தர் அம்மன் சிலையுள்ள அந்த குடிலுக்கு வந்தார். 

டோக்கன் முறைப்படி ஒவ்வொருவராக சந்தித்து குறைகளை அவராக கண்டுபிடித்தும் சிலருக்கு அவர்கள் சொல்லி கேட்டும் விபூசி பூசி சரியாகிவிடும் என அனுப்புகிறார். சிலருக்கு செய்தித்தாள் பேப்பரை கண்ணைமூடி கிழித்து கொடுக்கிறார் அதில் உங்களுக்கான தீர்வு இருக்கிறது என்று சொல்லி அனுப்புகிறார். உதாரணத்திற்கு குழந்தை இல்லாத குறையாக வந்திருக்கும் பக்தர்களுக்கு கண்ணைமூடி கண்டபடி கிழித்து கொடுக்கும் பேப்பரில் குழந்தைப் படமோ இல்லை குழந்தை சம்மந்தமான எழுத்துக்களோ இருக்கிறது. யார் என்னை குறைநிவர்த்தி சொன்னாலும்  அதற்கான தீர்வையும் நம்பிக்கையும் அந்த துண்டு சீட்டில் இருப்பது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மதியம் 1 மணி ஆனது நாங்கள் மதிய உணவு சாப்பிட்டு வந்து மீண்டும் அமர்ந்தோம். 2 மணிக்கு மேல் நண்பரின் நண்பர் டோக்கன் அழைக்கப்பட்டது. எனக்கோ மிகுந்த ஆர்வம் என்ன நடக்க போகிறதோ உண்மையை சொல்லப்போகிறாரா இல்லை உடான்ஸ் விட போகிறாரோ என்று. 

ஆனால் சித்தரின் முதல்  வார்த்தையே என்னை பிரமிக்க வைத்துவிட்டது. வாடா ITI இன்ஜினீயரே என்கிறார். இல்லைய்யா நான் மெக்கானிக்கல் படிச்சிருக்கேன் நண்பர் சொல்ல அதற்க்கு அவர் ITI யில் இருந்தாண்டா மெக்கானிக்கல் வந்தது என்று சிரித்தார். கண்ணை மூடி ஒரு பேப்பரை கிழித்து என்னிடம் கொடுத்தார் அதில் Recruitment என்று வந்தது. அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ற போல என்று ஒரு துண்டு சீட்டை கண்ணை மூடி கொடுத்தார் அதில் முதல்வரின் படம் இருந்தது. அடுத்து காசெல்லாம் கொடுத்திருக்க போல என்று கொடுத்த செய்தித்தாள் சீட்டில் ஆயிரம் ரூபாய் நோட்டின் படம். அடுத்து ஒரு சீட்டு கொடுத்தார் அதில் கோட்ட பொறியாளர் என்ற வார்த்தை இருந்தது. அந்த நண்பரின் கண்களில் பொல பொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது. நாம் ஏதும் சொல்லாமலே நம்முடைய விசயத்தைத்தை தெள்ளத்தெளிவாக புட்டு புட்டு வைத்ததாலோ என்னவோ. ஏனென்றால் அவர் EB துறை சம்மந்தமாகத்தான் அரசு தேர்வு எழுதியிருந்தார். சீட்டில் கோட்ட பொறியாளர்  எழுதிய தேர்வும் பொறியாளர் சம்மந்தமான துறை. கேட்ட எனது உடலும் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டது. கவலை படாதடா சிக்கல்கள் நீங்கி  கிடைச்சுடும் போன்னு விபூதி கொடுத்து அனுப்பிவிட்டார்.
 
முதல் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர இம்மியளவும் இடம்கொடுக்காமல் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
அடுத்து மற்றுமொரு நண்பர் சென்றதும் வாடா டிரைவர் இங்க ஓட்றியா வெளில ஓட்றியான்னு கேட்டதும் அப்டியே உறைந்து போயிட்டேன். எப்போ பர்மினன்ட் ஆவேன்னு கேட்டதும் சித்தர் கொடுத்த சீட்டில் உத்தரவு என்று வந்தது. பர்மனண்ட்  ஆயிட்டடா ஒரு மாசத்துல வந்துடும்னு சொன்னார். ஆர்டர் வந்ததும் ஒருமூட்டை அரிசியும் காய்கறியும் வாங்கி தருவியான்னு கேட்டார், நண்பரும் ஒத்துக்கொண்டார். கல்யாணம் எப்போ நடக்கும்னு கேட்டதுக்கு கொடுத்த சீட்டில் அனுமதின்னு வந்துச்சி. அனுமதி  கொடுத்திட்டேண்டா இன்னும் 3 மாசத்துல ஆயிடும் போயிட்டு வாடான்னு அனுப்பிட்டார்.
ஒரு வழியாக பார்த்துவிட்டு இரவு 10 மணிவாக்கில் பாபநாசத்தை வந்தடைந்தோம். பேருந்தை விட்டு இறங்கியதும்  அதிர்ச்சி தாக்கத்திலிருந்து மீளமுடியவில்லை ஏனென்றால் பேருந்தை விட்டு இறங்கிய நொடி அங்கு பேருந்துக்காக காத்திருந்த சக ஓட்டுநர் சொன்னார் உனக்கு CONFORM ORDER வந்திடுச்சு. GM டேபிள்ள உள்ள லிஸ்ட்ல உங்க பேர பார்த்தேன். நாளை உங்கள் கிளை பணிமனைக்கு அணுப்பப் பட்டுவிடும்னு.

அப்போது தான் சுத்தமாக இறை நம்பிக்கை ஆன்மீக நம்பிக்கை இல்லாத நான் சற்று பின்வாங்க நேரிட்டேன். மருத்துவரே கைவிட்ட பல பேரை இந்த அகோரி சித்தர் குணப்படுத்தி விடுகிறார் என்பதை நம்ப முடியவில்லைதான் ஆனால் நம்பாளும் இருக்கமுடியவில்லைய.  தீர்வு பெற்று குணமடைந்தவர்களும் நன்றி தெரிவிக்க நிறைய பேர் வந்திருப்பித்தனர். அவர்களின் அனுபவத்தை கேட்டறிந்த பின்பு நம்பிக்கையின் தன்மை வலுப்பெற தொடங்கியது.




சரி யார் தான் இந்த அகோரி சித்தர் அவருக்கு எப்படி இம்மாதிரியான சக்தி கிடைக்கப்பெற்றது என்பதை ஆராய தொடங்கினேன் அதன்படி ………
அவரை பற்றிய 3 மூன்று வீடியோ தொகுப்பு youtubeல் கிடைத்தது. 
2 தொகுப்பு ztamil தொலைக்காட்சியில் இடம்பெறும் நம்பினால் நம்புங்கள். மற்றொன்று வேந்தர் தொலைக்காட்சியில் வரும் மூன்றாவது கண்.  இந்த மூன்று வீடியோக்களே போதும் அவரைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள.









ஸ்ரீ ஆதிசிவசக்தி சித்தர் ஞான பீடம்
கார்காவயல்,
பட்டுக்கோட்டை வட்டம்,
தஞ்சை மாவட்டம்.

Thursday, January 8, 2015

மறுமலர்ச்சி (கம்பனுக்கு கைகொடுத்து)

கம்பனுக்கு கைகொடுத்து
காவேரிக்கு அணை எடுத்து
செம்பொன்னால் சிலம்பரத்து
சாமிக்கொரு கூரை காத்து
புஞ்சையில நஞ்சையில
பொன் விளையும் தஞ்சையில
புலிக்கொடிய எத்தி வச்சு
புகழ்கொடிய பறக்க விட்டு….
ஈழ நாட்டு எல்லை வரை
எசையாடு ஆண்டிருந்த சோழ நாட்டு மன்னருங்க
சந்ததியில் வந்தவரே.....!!! ஆமா....
புகழிருக்குது பெயரிருக்குது ராசு படையாச்சி தான்....!!!
எங்க ராசு படையாச்சி தான்....!!!
விரல் அசைவில ஊர் இருக்குது
நீர் நிலம் சாட்சி தான்...!!!
(அந்த நீர் நிலம் சாட்சி தான்...!!!)
தெரு முனையில சிலை இருக்குது
அவர் பெருமையா அது உரைக்கிறது
ஊருக்கெல்லாம் உலைய வச்சு
சோறிடுவார் இலைய வச்சு
அவர் தான் நம்ம சாமியின்னு
ஊரே ஒன்று கூடி நின்று
கொட்டுங்கடா உறுமி மேளம்
தட்டுங்கடா புதிய தாளம்......
ஹேய் (கொட்டுங்கடா உறுமி மேளம்
தட்டுங்கடா புதிய தாளம்)......
தானத்துல உயர்ந்த தானம்
அன்ன தானம் உலகிலே சாமி(ராசு படையாச்சி) போல
யாரும் அத செஞ்சதே இல்ல.......
சூரியனும் அஞ்சிடுமே சாயும் காலம் பொழுதிலே
சாமி மட்டும் அடுப்பை நம்பி பார்த்ததே இல்ல
ஆச்சி பயடையாசி செய்யும் ஊரு தான் இது
சாதி மத வேதம் எல்லாம் ஓடி போனது
கோதண்டமும் கூத்திரையும் கைய குலுக்குது
சிலுவை எல்லாம் சிநேகிதிமா சேர்ந்து சிரிக்குது….
எதுவும் இங்க பொதுவா மனம் பழகும்
ஒட்டு உறவா அதுக்கு தகுந்த வழிய வகுத்த
அவர் தான் நம்ம சாமியின்னு
ஊரே ஒன்று கூடி நின்று
கொட்டுங்கடா உறுமி மேளம்
தட்டுங்கடா புதிய தாளம்......... கொட்டுங்கடா.........
மணமுடிக்க மனம் இல்லாம வாழ்திருப்பவரு
ஊர் மக்களைத்தான் பெத்த பிள்ளை போல் நினைப்பாரு......
தாழ்த்தப்பட்ட ஜனங்களுக்கு தோள் கொடுப்பவறு
அந்த ஏழை பாழ சிரிச்சிருந்தா இவர் சிரிப்பாரு.......
நோய் இல்லாம நொடி இல்லாம நூறு ஆண்டு ஊர ஆண்டு பூமி மீது சாமி வாழ பாட்டு தட்டுங்கடா...
பூமி மீது சாமி வாழ பாட்டு தட்டுங்கடா.....
ராமையா சாமையா....அட வீரைய்யா வடி வேலய்யா உனக்கும் எனக்கும் நிழலை கொடுக்கும்
அவர் தான் நம்ம சாமியின்னு ஊரே ஒன்று கூடி நின்று கொட்டுங்கடா உறுமி மேளம் தட்டுங்கடா புதிய தாளம்......... கொட்டுங்கடா.........!!!
புகழிருக்குது பெயரிருக்குது ராசு படையாச்சி தான்....!!!
எங்க ராசு படையாச்சி தான்....!!!
விரல் அசைவில ஊர் இருக்குது
நீர் நிலம் சாட்சி தான்...!!!
(அந்த நீர் நிலம் சாட்சி தான்...!!!)
தெரு முனையில சிலை இருக்குது
அவர் பெருமையா அது உரைக்கிறது
ஊருக்கெல்லாம் உலைய வச்சு சோறிடுவார் இலைய வச்சு
அவர் தான் நம்ம சாமியின்னு
ஊரே ஒன்று கூடி நின்று
கொட்டுங்கடா உறுமி மேளம்
தட்டுங்கடா புதிய தாளம்......
அப்படி போடு
(கொட்டுங்கடா உறுமி மேளம் தட்டுங்கடா புதிய தாளம்)..........!!!

Friday, December 19, 2014

லேடிஸ் ஹாஸ்டல் - உஷார்

பெண்களுக்கான பதிவு (பெத்தவங்களுக்கும் சேர்த்து)!

‎ஒரு‬ விடுதியில் தங்கும்போது அந்த விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள் எப்படிப்பட்ட பெண்கள் என்று பார்ப்பது நல்லது. அதாவது, உங்கள் மாத வருவாயும் உங்களுடன் தங்கி இருக்கும் பெண்ணின் மாத வருவாயும் ஓரளவுக்காவது நிகராக இருக்க வேண்டும். உங்களைவிட இரண்டு மடங்கு வருமானம் வாங்கும் பெண்களோடு தங்கி இருக்கும்போது, அவர்கள் செய்யும் அசாதாரண செலவுகளுக்கு நீங்களும் பழக்கமாவீர்கள். அல்லது அந்தப் பெண்கள் உங்களைப் புறக்கணிக்கவும் செய்யலாம்.

உடன்‬ தங்கி இருப்பவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று முதலில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

‎சமையல்‬ அறையின் அமைவிடம் சரியாக இருக்கிறதா? டைனிங் ஹால் இருக்கும் இடம் எப்படி இருக்கிறது, துணிகள் சலவை செய்யும் இடம் போன்றவை சரியான இடத்தில் இருக்கிறதா எனப் பாருங்கள்.

‎நீங்கள்‬ தங்கப்போகும் விடுதியில் தனி ஆபீஸ் ரூம் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.

‎விடுதி‬ அமைந்து இருக்கும் இடம் மெடிக்கல், ஏ.டி.எம், பேருந்து நிலையம் இவை எல்லாம் அருகில் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள். ஒயின் ஷாப் அருகில் அமைந்திருக்கும் விடுதியைத் தவிர்ப்பது நல்லது.

‎செக்யூரிட்டி‬ இருக்கிறார்களா என்று பாருங்கள்.

‎குறுகலான‬ சந்து போன்ற இடங்களில் அமைந்திருந்தால் நிச்சயம் ஆபத்தான விடுதி என்று புரிந்துகொள்ளுங்கள்.

இரவு‬ 10 மணிக்குமேல் எந்த ஒரு ஆணும் கேட்டுக்குள் நுழையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஹாஸ்டல் ஓனராக இருந்தாலும்கூட.

‎இன்‬ டைம் அவுட் டைம் ஒவ்வொருவரும் கட்டாயம் எழுதவேண்டும் என்ற முறை உள்ளதா? என்பதை பாருங்கள். அதற்கான தனி பதிவேட்டினை வைத்திருப்பது நல்லது.

‎இது‬ எல்லாமே சரியாக இருந்தால் நிச்சயம் விடுதி என்பது உங்களின் இன்னொரு வீடாக இருக்கும்!

கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை விரும்புகின்றன ?


கொசுக்கள் தம் இனத்தை பெருக்குவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் மனிதர்கள் தம்மை சுற்றி தண்ணீர் மற்றும் கழிவுப் பொருட்களை அமைத்துக்கொண்டதே காரணமாம்.
காடுகளில் ரத்தத்தை தேடி அலைவதற்கு கிராமங்கள் நகரங்கள் அவைகளுக்கு தோதாக அமைந்து விட்டன. விலங்குகளிடம் இருப்பதை போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு இல்லை. அதுவுமில்லாமல் மனிதர்கள் கூட்டங் கூட்டமாக வசிக்கிறார்கள். அதனாலேயே விலங்குகளை விடுத்து அவை மனிதர்களை தேர்தெடுத்து இருக்க வேண்டும்.


அதென்ன மீத்தேன் வாயுத் திட்டம்?

டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் மீத்தேன் திட்டத்தை பற்றியும் அதன் தீங்கை பற்றியும் அனைவரும் அறிய ஒரு சிறு தொகுப்பை இங்கே பதிகிறேன்...

அதென்ன மீத்தேன் வாயுத் திட்டம்?
தமிழகத்தின் டெல்டா பகுதியான திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிப் பகுதியில் பூமிக்கு அடியில் அரியவகை நிலக்கரி இருப்பதாக மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்துள்ளது. அந்த நிலக்கரி படிமத்தின் மேல் மீத்தேன் வாயு படர்ந்துள்ளது. மத்திய அரசு மீத்தேன் வாயுவை வியாபாரரீதியாக எடுக்கும் பொருட்டு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம் மீத்தேன் வாயு திட்டத்தில் 5000 கோடி வரை முதலீடு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுக்க முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள்?
பூமியை 10, 000 மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலுமான ஆழத்தில் துளையிட்டு அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலும் எல்லா திசைகளிலும் பக்கவாட்டு துளை (bore) போடப்படும். பின்பு பூமிக்கு மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் தேர்வு செய்யப்பட்ட வேதி நுண் துகள்களை (Proppants) கலந்த நீர் மிகுந்த அழுத்தத்தில் செலுத்தப் படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டு துளைகளில் செல்லும் நீரானது அந்த துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே சிறைபட்ட, வழி இல்லாமல் உள்ளேயே அடைபட்டு கிடந்த மீத்தேன் எரிவாயுவின் சிறிய பகுதிகள் ஒன்றோடு ஒன்று கலந்து நீரில் ஒன்றாக கலந்து விடுகின்றன. அவ்வாறு கலந்த நீரை மீண்டும் உறிஞ்சி பூமியின் மேல்பரப்பிற்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்தகரிக்கப்பட்டு எஞ்சிய கழிவு நீர் "நீராவி மூலம் ஆவியாகப்படும் குட்டைகளுக்கு "(Evaporation pond's) எடுத்துசெல்லப்படும். பெரும்பான்மையான இடங்களில் அவை நீர் நிலைகளில் கலந்து விடப்படும். இதுவே (Hydraulic Fracking) என்று அழைக்கப்படும் செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி அதன் மூலமாக மீத்தேன் எரிவாயு சேகரிக்கும் முறை.

நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!

மீத்தேன் வாயு எதற்கு பயன்படுகிறது?
மீத்தேன் ஒரு மாற்று எரிசக்தியாக பயன்படுகிறது.
மீத்தேன் என்பது அடிப்படையான வளிமம் (வாயு – gas) ஆகும். இது ஹைட்ரோ-கார்பன் (கரிம-நீரதை, hydrocarbon) வகையைச் சார்ந்த ஒரு மூலக்கூற்றுப் பொருள் (molecule). மீத்தேனில், ஒரு கார்பன் (கரிமம்) மற்றும் நான்கு ஹைட்ரஜன் (நீரகம்) தனிமங்களால் (CH4) ஆன வேதியியல் கலவைகள் நிறைந்திருக்கும். முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்ட மீத்தேனை நுகர்ந்தால் எவ்வித மணமும் இருக்காது, மீத்தேனிற்கு தனியான நிறமும் இல்லை. காற்றில் 5 முதல் 15 சதவிகதம் மீத்தேன் கலந்தால், அது வெடிப்பொருளாக மாறும் தன்மை உடையது. எளிதில் எரியக்கூடிய தன்மையுடையது மீத்தேன் என்பதால், கவனக்குறைவால் எற்படும் சிறு கசிவும் ஆபத்தைத் தரக்கூடியது. ஆகையால், எங்காவது கசிவு இருந்தால் உணர்வதற்கு எளிதாக, இவ்வளிமத்தில் சிறிதளவு கந்தகம் (சல்பர்) சார்ந்த கலவையை சேர்த்து நெடி வீசக்கூடியத் தன்மையுடையதாக மாற்றுவார்கள்.

இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு என்னென்ன பாதிப்பு?
1. நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக உறிஞ்சப்படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச நீரும் கிடைக்காது.

2. மீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விட பன்மடங்கு உப்புத் தன்மையுடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும் , குளங்களிலும் கலக்கும் போது விவசாய நிலம் உப்பளமாக மாறும்.

3.மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில் எற்படும் மாற்றங்களால் குடிநீரோடு இந்த மீத்தேன் எரிவாயு கலக்கும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணைக் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் குழிகளில் வந்த நீர் தீப்பற்றி எரிந்ததை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அது ஒரு சிறிய எண்ணைக் கசிவால் ஏற்பட்ட விளைவு. மாவட்டங்கள் முழுக்க எண்ணைக் குழாய்கள் அமைக்கப்பட்டால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்.மீத்தேன் எடுக்கும் பணியில் குழாயில்  கசிவு ஏற்பட்டு மீத்தேன் வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது.  (அத்துடன் மீத்தேன் என்பது எளிதில் தீ பற்றக் கூடிய வாயு – அதாவது அதன் பண்பு நிலையானது மிகக் குறைந்த வெப்பத்திலேயே, தானே தீ பற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இதனை ஆங்கிலத்தில் – Highly inflammable, Lower flash point  என்பர்.) அப்படிக் கலந்தால் தஞ்சை திருவாரூர் ஒட்டு மொத்த  மாவட்ட மக்களின் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். நாம் சுவாசிக்கும் காற்று முழுக்க நஞ்சாக மாறும்.

4. நிலத்தின் அடியே குறுக்கும் நெடுக்குமாக தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை , திருவாரூர் மாவட்டம் முழுவதும் பூகம்ப ஆபத்து உருவாகும்.

5. இந்தத் திட்டத்தின் மூலம் நமது வழிபாட்டுத் தலங்கள் ,  தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட சரித்திர சின்னங்கள், பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்டவை பெரும் ஆபத்துக்குளாகும்.

6. மீத்தேன் எடுக்கும்  நிறுவனங்கள் உள்ளூரில் வேலை கொடுப்பதாகச் சொன்னாலும் அவர்கள் இந்த எரிவாயு எடுக்கும் அனுபவம் உள்ளவர்களையே  பணியில் அமர்த்த முடியும்.இதன் மூலம் தஞ்சை , திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு வெளிமாநில மக்கள் குடியேற்றப்படுவார்கள். 

7. தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின்   மக்கள்   தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.

8. இந்த நிறுவனங்கள் தங்கள் எரிவாயுவை கொண்டு செல்லக் குழாய் பதிப்பது , சாலை அமைப்பது போன்ற பணிகளைச் செய்யும் போது ஏற்கனவே விவசாயம் செய்ய நமக்கு இருக்கும் கட்டமைப்புக்களான ஆறுகள், குளங்கள் போன்றவை இந்த நிறுவனங்களால் அழிக்கப்படும்.

10. இந்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக மாறுவது மட்டுமல்ல , இந்தக் குழாய்களில் ஏற்படும் சேதத்திற்கு நம்  மீது தவறுதலாக  தீவிரவாத வழக்குப் போடவும் வாய்ப்பு இருக்கிறது.


கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன?
  1. மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்... கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்
  2. கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  3. கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, 'அவர்கள் யார்?’, 'நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும்.
  4. கிராமசபா கூட்டத்தில், 'எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  5. இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!


தஞ்சை என்பது அடர்ந்த வேளாண் பகுதி. அந்த வேளாண்மை தமிழ்நாட்டின் அச்சாணிகளில் முதன்மையானது. தமிழ்நாட்டின் பொருளாதாரமும் தொடர்ந்த செழிப்பும் இதனூடே வருவன. ஒரு நாட்டின் வேளாண்மையும், தொழிலும் ஒன்றை ஒன்று அழிக்காமல் பெருக வேண்டும். ஒன்றை அடித்து ஒன்றை வளர்ப்பது, ஒரு கண்ணைப் பொட்டையாக்கிக் கொள்வதற்குச் சமம். வளர்ந்த மேனாடுகள் யாவற்றிலும் இந்தப் பண்பாட்டையும் கட்டுப்பாட்டையும் காணலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls