மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத
உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே
தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோஸ் ஆக
மாற்றி அமைக்கப்படுகின்றன.
சீனி உடலுக்கு எந்த சத்தையும்
கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக்
கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும்
அழைக்கப்படுகிறது.
சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி
அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு
வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள்,
விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு,
சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு,
வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள
ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை
சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.
உங்கள் குழந்தைக்கு குளிர்பானம்,
ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக்
கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள்
என்று அர்த்தம்.
சீனி அதிகமாகவும் வைட்டமின்
மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு
வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய
துடுக்குத் தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும்
வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள்
சுட்டிக் காட்டுகின்றன.
இனிப்பான பொருளை உண்ணும்போது
வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது.
இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை
உண்டாக்குகிறது. சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்
இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள்
அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது
தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய்
மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம்
வித்திட்டுவிடுகிறோம்.
தினமும் 24 தேக்கரண்டி சீனி
நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை
தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும்
தன்மை உடையவை.
உடலில் அதிகம் சீனி இருந்தால்
அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு
அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும்
ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது
புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.
கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற
பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.
அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து
எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.
காபி, டீயில் ஒரு நாளைக்கு
அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள்
போதும். காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும்
விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
(வாழ்நாளை உயர்த்தும் உணவுப்பழக்கங்கள் - மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment